மட்டக்களப்பு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க ஆறாயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று(29) மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரியபோது அவர் இலஞ்சமாக ஆறாயிரம் ரூபாவை கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியிலுள்ள வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த பொதுச் சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக ஆறாயிரம் ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54வயது பொதுச் சுகாதார பரிசோதகரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.