ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிர்ப்பலி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.