பாக்.,கில் 10 சதவீதம் பேர் கையேந்துகின்றனர் பரிதாபம்! 'விசா' தருவதற்கு பல நாடுகள் தயக்கம்

 இஸ்லாமாபாத்: ஒருபக்கம் பயங்கரவாதிகளை வளர்த்துவிடுவதாக, பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், மறுபக்கம் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேர் கையேந்துகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணயநிதியத்திடம் இருந்து கடன் வாங்கியுள்ளது.
ஏற்கனவே இரண்டு தவணைகள் வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட தவணைக்கு, ஐ.எம்.எப்., பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் வாயிலாக, பாகிஸ்தானில் மின்சாரம், சமையல் காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கான வரியும் அதிகரிக்கும்.

அதிக ஆர்வம்


ஒரு பக்கம் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து, ஊக்குவித்து, பாதுகாப்பு அளிப்பதாக, பாகிஸ்தான் மீது கடும் குற்றச்சாட்டு உள்ளது. மறுபக்கம், அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேர் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த, ஏப்., 19ல் சியால்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் இந்த பிரச்னை குறித்து விவரித்தார்.

'மக்கள் பிச்சை எடுப்பது என்ற பிரச்னை மிகவும் தீவிரமாக உள்ளது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்த மக்கள் தொகையான, 24.75 கோடி பேரில், 10 சதவீதம் பேர், அதாவது, 2.2 கோடி பேர் பிச்சை எடுக்கின்றனர்.

 'இந்தத் தொழில் வாயிலாக, ஆண்டுக்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கிறது. அதனால் உழைக்காமல், பிச்சை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

'பிச்சை எடுப்பதற்காக பல நாடுகளுக்கும் பாகிஸ்தானியர்கள் செல்கின்றனர். இதனால், விசா வழங்குவதற்கு தற்போது பல நாடுகள் தயக்கம் காட்டுகின்றன' என, க்வாஜா ஆசிப் கூறினார்.

விமர்சனம்


இதற்கிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி, அந்த நாட்டின் பார்லிமென்டில் சமீபத்தில் சில புள்ளி விபரங்களை வெளியிட்டார். 'சவுதி அரேபியா, ஈராக், மலேஷியா, ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பிச்சை எடுத்ததாக, 2024 ஜனவரியில் இருந்து நடப்பாண்டு இதுவரை 5,402 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டனர்' என அவர் கூறினார்.

மதம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்று, இவர்கள் அந்த நாடுகளிலேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதனால், தற்போது, பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதற்கு, இந்த நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. மேலும், பாகிஸ்தான் அரசுக்கும் சில நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மூன்று ஆண்டுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், 'நட்பு நாடுகள் கூட நம்மை பிச்சைக்காரர்களாக பார்க்கின்றன' என, குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே சமூக வலைதளங்களிலும் பலர், பாகிஸ்தானின் இந்த நிலைமை குறித்து விமர்சித்துள்ளனர்.


 

 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form