பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, பாகிஸ்தானுக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, "ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது. வர்த்தகமும் பயங்கரவாதமும் ஒருங்கே பயணிக்க இயலாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இனி பேச்சு நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை குறித்தும் மட்டுமே பேச்சுவார்த்தை இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பிரதமர் மோடி கூறிய மேற்கோளை, சிறுநீரக மருத்துவரான சிவேந்திர சிங் திவாரி, தனது மருத்துவமனைக்கு விளம்பரமாக மாற்றியது இணையத்தில் வைரலானது.
அந்த போஸ்டரில் "இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆகவே உங்கள் சிறுநீரில் இரத்தத்தைக் கண்டால், உடனடியாக ஒரு சிறுநீரக மருத்துவரை அணுகவும். அது தீவிரமான பிரச்சனையாக இருக்கலாம்" என்று விளம்பரம் செய்துள்ளார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விளம்பரம் அமைந்திருந்தாலும் பாஜக ஆதரவாளர்கள் இந்த விளம்பரத்திற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.