சென்னை:
கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்து இருந்தார்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழு மம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மைதானங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.