டிரானா:
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, அதிபரின் உதவியாளர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார். ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணைய தலைவர் மற்றும் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் என்றார். ரஷியா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, ராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு, பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.