என் மனதை மிகவும் ஈர்த்த படம்..! டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி

 சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அவர்களின் குடும்பம் பற்றியும், இவர்களின் குடும்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இக்கதைக்களம் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.

அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.

படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை..இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.

படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form