காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
அந்த பயங்ரகவாதிகளுக்கு வேட்டையாடும் பணியை இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்களும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.
எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு எல்லைகளிலும் போர் பதற்றமானது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடி தலையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், முப்படைத் தளபதிகள், முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு கடுமையான அடி கொடுப்பது நமது தேசிய உறுதிப்பாடு. இந்திய ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன்களில் முழு நம்பிக்கை உள்ளது. நமது பதிலடியின் முறை, இலக்குகள் மற்றும் நேரத்தைத் தீர்மானித்து செயல்பட ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுப்பதாக கூறியுள்ளார் என அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.