இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக இது தொடர்பாக மவுனம் காத்து வந்தது.
இதற்கிடையே ஒரு சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது சமூக பாதுகாப்பு, இடஒதுக்கீடு கொள்கைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத்ியுள்ளார்.
மேலும், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்திற்கான முதல்படி. மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சமூகப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுஆய்வுக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடு மீதான தன்னிச்சையான உச்சவரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.