இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை இந்தியா ராணுவம் முறியடித்தது. மேலும் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின் 4 நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தியாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீ்பபுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இம்ரான்கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி முடிவு செய்து உள்ளது.
தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. இதை தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அசாத் கைசர் உறுதி செய்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை நாங்கள் பரிசீலனையில் வைத்திருக்கிறோம். பாகிஸ்தான்-இந்தியா இடையே ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கினோம். தற்போது பதட்டம் குறைந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளோம் என்றார்.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை ஷபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.