திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.
சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.
மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், செவிலியர் சித்ராவை கொலை செய்ததாக அவரது கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் வைத்து ராஜேஷ் கண்ணாவை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.