இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்த 20 ஆவது சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சி இன்றுவரை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த கண்காட்சியை நேற்று பார்வையிட்டார்.
இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது . இந்த கண்காட்சி இன்று வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.
கண்காட்சி கூடங்களுக்கு சென்று காட்சிப்படுத்துவோரின் தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி, கண்காட்சியை பார்வையிட வந்திருந்தவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
கண்காட்சியை பார்வையிட ஜனாதிபதியுடன் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை நிர்மாண சபையின் தலைவர் ஜயந்த பெரேரா, தலைமை நிறைவேற்று அதிகாரி இலங்கை நிர்மாண தொழில்துறைச் சபையின் முன்னோடித் தலைவர் தேசமான்ய கலாநிதி சுரத் விக்ரமசிங்க உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அனுசரணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை கண்காட்சியின் அனுசரணை நிறுவனங்களுக்கு ஜனாதிபதியால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
280 காட்சிக் கூடங்களைக்கொண்ட இந்தக் கண்காட்சியானது, வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறையில் முக்கிய தரப்பினர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக அமைந்துள்ளது.
இதன் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், வர்த்தக வாய்ப்புகளைப் பெறவும், புதிய நிர்மாணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றிய புரிதலைப் பெறவும் கண்காட்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்வேறு நாடுகளின் காட்சிப்படுத்தல் கூடங்களில் பல வகை பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் நுகர்வோருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழல் நேய நிர்மாணப் பொருட்கள் பலவற்றையும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.