நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த ஐஸ் போதைப் பொருளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு பிரபல பாடசாலை அமைந்துள்ளது பகுதியில் வைத்து நேற்று (01) இரவு இக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கையின் போது 34,35,41 வயதுடைய சந்தேக நபர்கள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடமிருந்து 568 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள், 1 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள், 763 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் , சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த கைது நடவடிக்கையில் பல நாட்களாக தேடப்பட்டு வந்தவரும், நீண்ட நாட்களாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.